“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?
PSLV - C61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நாங்கள் மீண்டு வருவோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தனது 101-வது விண்வெளி பயணமாக பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 5:59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-09, சூரிய ஒத்திசைவு துருவ புவி வட்டப்பாதையில் 524 கி.மீ உயரத்தில் நிறுவுவதாகும். ஆனால், மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பயணம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், ”இஸ்ரோவின் 101 ராக்கெட் இன்று ஏவப்பட்டது, 2வது அடுக்கு பிரியும் வரைம் PSLV C-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது.
3வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. இதுகுறித்து முழுமையாக ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டு தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.