பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து அல்லேரி மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி…!

பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து, அல்லேரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி
கடந்த மாதம் 29-ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே உயிரிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர்.
பச்சிளம் குழந்தை உயிரிழப்பையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வனத்துறையிடம் அனுமதி பெற்று மலை கிராமத்தில் சுமார் 6கிமீ சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம் என தெரிவித்த நிலையில், உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து, அல்லேரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் அந்த கிராமத்திலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.