#BREAKING: சமூகநீதி கூட்டமைப்பு – 37 தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்!

சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு 37 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு கூட்டணியில் இணையுமாறு ஓபிஎஸ் உள்பட 37 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, அதில் இணையுமாறு சோனியாகாந்தி, சரத் பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி, சந்திரபாபுநாயுடு, ஓபிஎஸ் உள்பட நாட்டில் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையின் நம்பிக்கைகொண்ட அனைவரும் இணைந்ததால் எதிர்த்து போராட முடியும் என்றும் இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் சமூகநீதி கருத்தியலை முன்னெடுத்து செல்ல அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொளி வாயிலாக முதலமைச்சர் நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அகில இந்திய அளவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிலைநாட்டியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி.ஐயும் பாராட்டி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா இணைய வழியாக நடைபெற்றது. இதில் நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க உள்ளேன். சமூகநீதி பற்றி அக்கறை கொண்ட இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள். இந்த கூட்டமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு நாட்டில் உள்ள 37 அரசியல் கட்சிகளை சார்ந்த தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.