பொதுத்தேர்வு அட்டவணை அடுத்தமாதம் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி 21 நாள்களுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றதால் ஊரடங்கு மேலும் 19 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வராததால் கடந்த 03-ம் தேதியுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அறிவித்தது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முதற்கட்ட ஊரடங்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறுமா..? அல்லது எப்போது நடைபெறும் என்ற கேள்வி..? மாணவர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.