எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை – செங்கோட்டையன் அதிருப்தி!
அத்திக்கடவு அவிநாசி திட்ட பாரட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

சென்னை : அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் நடைபெற்றது. பாராட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும், அந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எனவே, அவர் எதற்காக பங்கேற்கவில்லை என்கிற கேள்விகளும் எழும்ப தொடங்கியது. இதனையடுத்து, ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதற்கு விளக்கம் அளித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் குழுவை சார்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்தார்கள். அவர்கள் என்னை சந்தித்தபோது நான் வைத்த வேண்டுகோள் என்னவென்றால், எங்களை உருவாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவர் அம்மா ஜெயலலிதா படங்கள் இல்லை.
இது தொடர்பாக என்னிடம் நீங்கள் பேசியிருந்தால் அதனை உங்களுடைய கவனத்திற்கு எடுத்து சொல்லிருப்பேன். பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி தொடர்பான பேனர்கள் வைக்கும்போது தான் என்னுடைய கவனத்திற்கு இது வந்தது. ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவருடைய படங்கள் இல்லை. அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு 2011-இல் அம்மா அவர்கள் 3கோடி 72 லட்சம் வழங்கினார்.
ஆகவே இந்த பணிகளை துவங்குவதற்கு அவர்கள் தான் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய படங்கள் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன். நான் நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லையே செல்லவில்லை. மற்றபடி புறக்கணிக்கவில்லை” எனவும் செங்கோட்டையன் விளக்கம் அளித்து பேசினார்.