“மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை விமர்சனம்.!
வடமாநிலங்களில் முருகன் மாநாட்டை நடத்த மாட்டார்களா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாடு” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தங்கள்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”முருகன் மாநாட்டை குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடத்துவார்களா? விநாயகரை தமிழக மக்கள் வணங்கும்போது முருகரை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்களா என்ன? ராமர் மாநாடு, விநாயகர் ஊர்வலம் இங்கு நடத்தும்போது வடமாநிலத்தில் முருகன் மாநாட்டை நடத்தலாமே.
விநாயகரை நம் தமிழக மக்கள் வணங்குகின்றனர். முருகரை வடமாநில மக்கள் ஏற்றுக்கொள்ளாமலா இருப்பார்கள்? இங்கு ராமர் மாநாடு மற்றும் விநாயகர் ஊர்வலங்கள் நடக்கும்போது, வடமாநிலத்தில் முருகன் மாநாட்டை நடத்த யோசிக்கலாம் அல்லவா. மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள், அதற்காகத்தான் இந்த முருகன் மாநாடு போன்றவை நடத்தப்படுகிறது.
ஏற்கனவே நம்முடைய இந்து அறநிலையத் துறை சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இவர்கள் நடத்த வேண்டிய தேவை இப்போது என்ன இருக்கிறது? வட மாநிலங்களில் எப்படி கலவரத்தை தூண்டினார்களோ அதே போன்று தென் மாநிலங்களிலும் தூண்ட நினைக்கிறார்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.