ராமதாஸ் கடும் விமர்சனம்: கட்சி நிர்வாகிகளோடு அன்புமணி இன்று ஆலோசனை..!
பாமகவில் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு அன்புமணி சந்திக்கிறார்.

சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், அன்புமணி தனித்து அலுவலகம் தொடங்கி, நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார்.
நேற்றைய தினம் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இன்று (மே 30) முதல் ஜூன் 1-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.
அதன்படி, மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. மாவட்ட வாரியாக உள்ள முக்கிய நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து ஆலோசனை செய்யவிருக்கிறார்.
முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். மேலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளோடு மாலையில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
முன்னதாக, ராமதாஸ் தைலாபுரத்தில் நடத்திய கூட்டத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை, இது கட்சிக்குள் பிளவு இருப்பதை உறுதிப்படுத்தியது. இதற்கு பதிலடியாக, அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.