வேகமெடுக்கும் கொரோனா: ‘மக்கள் பதற வேண்டாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்!
அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147, மஹாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294, குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால், பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் பரவும் கொரோனாவால் முகக்கவசம் கட்டாயமா? அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? அரசின் அறிவுறுத்தல்கள் என்னென்ன? என்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவால் மக்கள் பதற்றமடைய வேண்டாம். இந்த வகை கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைப்பிடித்தால் போதுமானது.
சமூக இடைவெளி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் எனினும் கட்டாயமில்லை என்றும் கூறினார். மேலும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 60 வயது முதியவருக்கு நீரழிவு உள்ளிட்ட இணை நோய்கள் இருந்துள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை” என்று கூறியுள்ளார்.