கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர்.
மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் புதுவகை கொரோனா பரவி வருகிறது. குஜராத்தில் 8 மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இது, சுவாச நோய்த்தொற்றுகளை தடுக்க உதவும். மேலும், பருவ கால காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரண காய்ச்சல் தொண்டை வலி இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகவும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, தொற்று அறிகுறிகள் தென்படுவோரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலகர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் கடந்த மே 28ம் தேதி உயிரிழப்பு பதிவானது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்த மோகன் (60) என்பவரின் வீட்டைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கவும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.