”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!
7வது முறையாக திமுக ஆட்சி அமைத்ததாக அடுத்த ஆண்டு இதே நேரம் தலைப்புச் செய்தி இருக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசி வருகிறார்.

மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தற்போது கூட்டத்தில் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். கோமாளி கூட்டத்தால் திமுகவை ஒருபோதும் வெல்ல முடியாது. எத்தனை ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது, டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் Out of control தான்.
சூரியன் எப்படி நிரந்தரமானதோ அதேபோல் திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ அதேபோல் திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்.
நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி. அவர்களோடு நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது; வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான். இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள், எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும், செயல்பாடுகள் வேகமாக இருக்கும், வெற்றி உறுதி செய்யப்படும்.
ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு. அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி 66 வந்திருக்கவேண்டும் என்றால், ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது, இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும்பொதுக்குழுதான் இது” என்று பேசி வருகிறார்.