‘தேர்தலை ஒட்டியதே அரசியல்’.., ராஜ்யசபா சீட் வழங்காதது குறித்து பிரேமலதா சொன்ன கருத்து.!
மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக உறுப்பினர் அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை செந்தித்து பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ,”அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டியிடுவார்கள். தேமுதிக-வுக்கு 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும்.
ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவும் கூட்டணியில் தொடரும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக உறுப்பினர் அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,” தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட்டு தருவதாகக் கூறி கடமையை செய்துள்ளது அதிமுக. தேமுதிக-வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024-ல் கையெழுத்துப் போட்டு கொடுத்தார்கள், அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம்.
ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது, இப்போது 2026 தேர்தலை ஒட்டி மாநிலங்களவை சீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அந்த தேர்தலை ஒட்டிதான் எங்களின் அரசியல் நகர்வும் இருக்கும், அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.