மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு – மு.க.ஸ்டாலின்

கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகளான சுபஸ்ரீ, கடந்த 2வருடங்களாக நீட் தேர்வுக்காக ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்தாண்டு பல் மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். பின்னர் பொது மருத்துவ படிப்பில் சேர இந்தாண்டிற்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
ஆனால் இந்தாண்டிற்கான நீட் தேர்வை கொரோனா பாதிப்பின் காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த முறையும் தான் தோல்வி அடைவோமோ என்று நினைத்து மன அழுத்தத்தில் இருந்த சுபஸ்ரீ நேற்று முன்தினம் மதியம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்காக கோவை மாணவி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை! சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.
கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு!#PostponeJEEAndNEET
— M.K.Stalin (@mkstalin) August 19, 2020