எனது உயிருக்கு அச்சுறுத்தல்! எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல – ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி!

எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் சேலத்தில் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டியில், கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். தனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார்.
கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் தான் சந்தித்தேன். தன்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். அதுவும் ,எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்.
3 பெரிய பைகளை சங்ககிரியிலும், 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக தன்னிடம் கனகராஜ் தெரிவித்ததாக அவரது சகோதரர் பரபரப்பான தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கோடநாடு பங்களாவில் இருந்து ஏரளமான ஆவணங்களை பையில் கனகராஜ் எடுத்து வந்ததாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கனகராஜ் தெரிவித்த நிலையில் தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்.
எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல, ஜோடிக்கப்பட்ட திட்டமிட்ட கொலை. அதாவது, நம்ம அரசாங்கம் தான் உள்ளது, கோடநாடு பங்களாவில் உள்ள சொத்து ஆவணங்களை எடப்பாடி பழனிச்சாமி தான் எடுத்து வர சொன்னதாகவும், அதனால் தான் எடுத்து வந்ததாகவும், கனகராஜ் சொன்னதாக அவரது சகோதரர் தனபால் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், கோடநாடு வழக்கில் நான் உயர்நீதிமன்றம் ஜாமீனில் உள்ளேன், கோடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. என்னை விசாரிக்கும்போது அனைத்தையும் கூறுவேன். ஏற்கனவே சுதாகர் ஐஜி தலைமையில் விசாரணை நடத்தினார்கள். அப்போதும் நான் கூறியுள்ளேன். எனவே, சிபிசிஐடி காவல்துறை என்ன அழைக்கவில்லை, விசாரணைக்கு அழைக்கும்போது நான் அனைத்தையும் கூறுவேன் என தெரிவித்தார்.
அன்று முதல் இன்று வரை குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறேன், ஆனால் அரசாங்கம் இதுவரை எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவில்லை. எனவே அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றார். மேலும், எனது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது, என்னால் வெளியில் தனியாக நடமாட முடியவில்லை. இதனால் தமிழக அரசு எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எதையும் சொல்ல கூடாது என்றும், வெளியே வந்த கொன்றுவேன் எனவும் மிரட்டியதாகவும் தனபால் தெரிவித்துள்ளார்.