பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!
பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது
ஆனால், இந்த IED குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கச்சி மாவட்டத்தின் மாக் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரின் வாகனத்தை ஐஇடி மூலம் குறிவைத்து தாக்கியதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானில் செயல்படும் மிகப்பெரிய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை இராணுவமாக (BLA) இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏன்னென்றால், இதுவரை பாதுகாப்புத் தொடரணி தாக்குதல்கள் உட்பட பல்வேறு தாக்குதல்களை பலூச் விடுதலை இராணுவம் தான் நடத்தியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் 30 முதல் 40 ஆயுதமேந்திய நபர்கள் கைதிகளை ஏற்றிச் சென்ற போலீஸ் வேனை கடத்திச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமான பலூசிஸ்தான், வளங்கள் நிறைந்ததாகவும் புவியியல் ரீதியாக மூலோபாய ரீதியாகவும் உள்ளது.