கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் கடந்து சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில் ரயில்வே துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

SchoolVan Accident

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரட்டை சோகம், உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே, ஆச்சாரியா பள்ளியின் வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் அதிவேகமாக வந்து மோதியது. இதில் வேன் முற்றிலும் நொறுங்கியதாகவும், மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட உடைமைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் தாக்கத்தால் அருகிலிருந்த மின்கம்பி அறுந்து, அண்ணாதுரை மீது விழுந்து மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் என்ன தகவல்?

முதற்கட்ட விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படாதது விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. கேட் கீப்பர் கவனக்குறைவாக இருந்ததாகவும், ரயில் வருவதை அறிந்தும் கேட்டை மூடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி வேன் ஓட்டுநர், கேட்டை மூட வேண்டாம் என கேட் கீப்பரிடம் கூறி, அவசரமாக கடக்க முயன்றதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த முரண்பட்ட கூற்றுகள் குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் மற்றும் சென்னை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் வைத்த குற்றச்சாட்டு

“கேட் கீப்பரின் அலட்சியத்தால் இந்த கோர விபத்து நேர்ந்தது,” என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “ரயில்வே கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கிவிட்டார். இதனால் வேன் கடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது,” என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆளில்லா ரயில்வே கேட் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மற்றும் கேட் கீப்பர்களின் கவனக்குறைவு இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் பராமரிப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ரயில்வே விளக்கம்

ரயில்வே தரப்பில், “பள்ளி வேன் ஓட்டுநர்தான் ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என கேட் கீப்பரிடம் கூறி, கடந்து செல்ல முயன்றார்,” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ரயில் வருவதை அறிந்து கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, வேன் ஓட்டுநர் அவசரமாக கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்று கூறினார். ஆனால், வேன் முழுமையாக கடக்க முடியாத நிலையில், விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் மோதியது,” என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளியாகும் எனவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்