கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

விபத்து நடந்தபோது, ரயில்வே கேட் திறந்தநிலையில் இருந்ததாகவும், கேட் மூடப்படவில்லை என்றும் வேன் ஓட்டுநர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Cuddalore accident driver statement

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில், தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த மாணவி சாருமதி (16, 11ஆம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (15, 10ஆம் வகுப்பு) மற்றும் ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் சில மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தபோது, ரயில்வே கேட் திறந்தநிலையில் இருந்ததாகவும், கேட் மூடப்படவில்லை என்றும் வேன் ஓட்டுநர் சங்கர் (47) தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வாக்குமூலத்தின் வீடியோவில், தாம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் எதுவும் பேசவில்லை என்றும், கேட்டை மூட வேண்டாம் எனக் கூறவில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். மேலும், விபத்து நடந்த பிறகும் கேட் கீப்பர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்து, செம்மங்குப்பத்தில் உள்ள ‘நான்-இன்டர்லாக்’ ரயில்வே கேட்டில் நிகழ்ந்தது, இதற்கு தொலைபேசி மூலம் தகவல் பெறப்பட்டு கேட் மூடப்பட வேண்டும். ஆனால், ரயில் வரும் நேரத்தில் கேட் மூடுவதற்கு தகவல் முறையாக அளிக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்கள், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர், மேலும் அவர் தூங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து, ஆளில்லா ரயில்வே கேட்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

மேலும், முன்னதாக ரயில்வே தரப்பில், “பள்ளி வேன் ஓட்டுநர்தான் ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என கேட் கீப்பரிடம் கூறி, கடந்து செல்ல முயன்றார்,” என விளக்கம் அளித்திருந்தது. “ரயில் வருவதை அறிந்து கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, வேன் ஓட்டுநர் அவசரமாக கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்று கூறினார்.  ஆனால், வேன் முழுமையாக கடக்க முடியாத நிலையில், விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் மோதியது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றபோது, மூட வேண்டாம் என வேன் ஓட்டுநர் கூறியதாக முதலில் அறிக்கை கூறிவிட்டு கேட் கீப்பர் கேட்டை மூடியதாகவும், திறக்க சொல்லி ஓட்டுநர் வலியுறுத்தியதாகவும் 2ஆவது அறிக்கை வெளியிட்டுள்ள காரணத்தால் அறிக்கையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. விசாரணை முழுவதுமாக முடிந்த பிறகு விபத்துக்கான காரணம் குறித்த தகவல் தெளிவாக தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்