2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!
2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, ஜூலை 8, 2025 அன்று சென்னையில் நடைபெற உள்ள பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இரு நிர்வாகிகளை மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளிட்டுள்ளார் அறிக்கையில் ” தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் இரண்டு கோடி இல்லங்களில், இரண்டு கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.இது குறித்துச் சென்னை. பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், வருகிற 08.07.2025 அன்று காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடன். கழகத்தின் மற்ற நிர்வாகிகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.