இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!
ஈரான் - இஸ்ரேல் இடையே 24 மணி நேரத்தில் முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் பதிவில், ”இன்னும் 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் தொடங்கும், ஈரான் முதலில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும், அதைத் தொடர்ந்து 12 மணி நேரம் கழித்து இஸ்ரேல் அமல்படுத்தும்.
இதன் மூலம் போர் அதிகாரப்பூர்வமாக 24 மணி நேரத்தில் முடிவடையும். இதை “12 நாள் போர்” என்று அழைக்க வேண்டும், இந்தப் போர் பல ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய கிழக்குப் பகுதி முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டிருக்கும். இந்த 12 நாட்கள் நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்த இருநாடுகளின் தைரியத்தை பாராட்டுகிறேன். போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல், ஈரானுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
Donald J. Trump Truth Social 06.23.25 06:02 PM EST pic.twitter.com/hEz0w4FUC9
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) June 23, 2025
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்களைக் குறிவைத்து ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்திய நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி நேற்று முன் தினம் அமெரிக்கா தாக்கியது.
தற்போது, இதற்கு பழிதீர்க்கும் வகையில் ஈரானும், அமெரிக்கா எவ்வளவு எண்ணிக்கையில் குண்டுகளை பயன்படுத்தியதோ, அதே எண்ணிக்கையிலான குண்டுகளுக்கு சமமான 10 ஏவுகணைகள் மூலம் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.