நைஜீரியா: தொழுகையின் போது மசூதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு.. 23 பேர் காயம்!

வடமேற்கு நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு நைஜீரியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான ஜரியாவில் ஜரியா மத்திய மசூதி உள்ளது. மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்த தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இந்த சம்பத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் அவசரகால பேரிடர் மேலாண்மை அமைப்பினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி கூறுகையில், இந்த மசூதி 1830களில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பாரம்பரியமான மசூதி என்பதால், இங்கு நடைபெறும் தொழுகை மிகவும் பிரபலமானது. வாரந்தோறும் நடைபெறும் இந்த தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர். இந்த நிலையில் நேற்று தொழுகை நடைபெற்றபோது, மசூதியின் மேற்கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 7 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். இதனிடையே, கடுனா மாநில கவர்னர் உபா ஷனி, இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கடந்த ஆண்டில் 10கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை, அடுத்து நேற்று மசூதி இடிந்து விழுந்தது.