இஸ்ரேல் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ! அந்தர் பல்டி அடித்த டிரம்ப்!
இஸ்ரேல் நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இந்தத் தாக்குதல்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன் : ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2330 GMT) தொடங்கிய இந்தத் தாக்குதல்களில், ராணுவத் தளங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஈரானின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.மேலும், இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகெரி, மற்றும் ராணுவ மத்திய தலைமையகத் தலைவர் ஜெனரல் கோலம் அலி ரஷித் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஈரானின் ராணுவத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்கள்.
அதே சமயம், அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளான பெரெடூன் அப்பாசி, முகமது மெஹ்தி தெஹ்ரான்சி, அஹ்மத்ரேசா ஜொல்பாகரி, மற்றும் அப்துல் ஹமீது மினூ செஹர் உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பெரெடூன் அப்பாசி, 2010-இல் நடந்த ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா அலி கோமேனி இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தனது அறிக்கையில், “இஸ்ரேலின் இந்தக் குற்றச் செயல் மன்னிக்கப்படாது. குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதன் மூலம் அவர்களின் தீய எண்ணங்கள் தெளிவாகியுள்ளன. ஈரானின் ஆயுதப்படைகள் இதற்கு உரிய பதிலடி கொடுக்கும்,” என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் வலுவான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
இப்படி பரபரப்பான சூழலில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இந்தத் தாக்குதல்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தில் பதிவிட்ட அவர், ஈரானுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், அணுசக்தி செறிவூட்டல் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்குமாறு வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். ஆனால், ஈரான் தங்களுக்கு எதிராக எதிர்பாராத அளவுக்கு வலுவான பதிலடியை எதிர்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் ஆபத்தான ராணுவத் தளவாடங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை திறம்பட பயன்படுத்தும் திறன் கொண்டவை என்றும் கூறினார். சில ஈரானிய தலைவர்கள் துணிச்சலாக பேசியதாகவும், ஆனால் அவர்கள் வரவிருந்த ஆபத்தை உணரவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், “இப்போது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலைமை இன்னும் மோசமடையலாம்,” என எச்சரித்தார். மேலும், ஈரான் உடனடியாக அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அழிவைத் தவிர வேறு வழியில்லை என மிரட்டலும் விடுத்துள்ளார். டிரம்பின் பதிவை பார்த்த பலரும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னால் அமெரிக்காவின் மறைமுக ஆதரவு இருக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளதாக கூறி வருகிறார்கள்.