“போரை தொடங்கிட்டீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
போரை நீங்கள் தொடங்கலாம், ஆனால் நாங்களே முடிப்போம் என அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த பதற்றமான சூழலில்,நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தும் இருந்தார்.
ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று எச்சரித்தார், மேலும் முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று IRGC அறிவித்தது. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் முக்கிய அணு உலைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் விளைவிக்கவில்லை என்றும், கதிரியக்க மாசு ஏற்படவில்லை என்றும் ஈரான் அணு ஆற்றல் அமைப்பு உறுதிப்படுத்தியது.
இருப்பினும், “அமெரிக்காவின் தாக்குதல்கள் எங்கள் அணு ஆராய்ச்சியை நிறுத்தாது,” என்று ஈரான் அணு ஆற்றல் அமைப்பு தெரிவித்தது. எனவே, பதற்றம் இப்போது மிகவும் உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். இப்படியான சூழலில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு, ஈரான் ராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இந்தத் தாக்குதல் மிகக் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா தனது செயல்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். ட்ரம்ப், நீங்கள் ஒரு சூதாட்டக்காரர். நீங்கள் இந்தப் போரைத் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம்,” என்று ஈரான் ராணுவத்தின் புரட்சிக் காவல்படை (IRGC) தளபதி ஹொசைன் சலாமி பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும், அதே சமயம் ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ், இந்தத் தாக்குதலை “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்” என்று கண்டித்து, அனைத்து தரப்பினரும் உடனடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று கோரினார். ஈரானின் எச்சரிக்கை, ரஷ்யா, சீனா, மற்றும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், மத்திய கிழக்கில் மோதல் உலகளாவிய அளவில் பரவும் அபாயத்தை உயர்த்தியுள்ளது.