என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 228 ரன்கள் எடுத்துள்ளது.

நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. பெங்களூர் அணி எந்த அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடப்போகிறது என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது. இப்படியான சூழலில், இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதுகிறது.
போட்டியில் டாஸ் வென்றவுடன் உடனடியாக மும்பை நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள் என்று சொல்லலாம். சில கேட்சுகளை குஜராத் தவறவிட்டால் கூட இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டு விளையாடினார்கள்.
ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தபோது ஒரு பக்கம் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி கொண்டு இருந்தார். அந்த சமயம் ஜானி பேர்ஸ்டோவ் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு அதே அதிரடி தொடர வேண்டும் என ரோஹித் சர்மா அதிரடி காட்ட தொடங்கினார்.
மற்றோரு முனையில் நின்று கொண்டிருந்த சூர்யகுமார் யாதவும் நானும் அதிரடியில் இறங்குகிறேன் என்பது போல சிக்ஸர் பவுண்டரி என விளாசத்தொடங்கினார். இரண்டுபேரும் மாற்றி மாற்றி அதிரடி காட்டிய காரணத்தால் குஜராத் அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் சாய்கிஷோர் நான் போடுறேன் பிரேக் என்பது போல சூர்யகுமார் யாதவை 33 ரன்களில் தூக்கினார்.
எனவே, கடைசி நேரத்தில் பார்ட்னர்ஷிப்பை நிறுத்தியதால் குஜராத் அணி பெருமூச்சி விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், கொஞ்ச நேரம் கூட அது நீடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், ரோஹித் சர்மா மீண்டும் தனது கியரை அதிரடிக்கு மாற்றி குஜராத் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
அவரை போல மற்றோரு முனையில் நின்றுகொண்டிருந்த திலக்வர்மாவும் அதிரடியில் இறங்கி கலக்கினார். பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் ரோஹித் ஷர்மாவின்(81) விக்கெட்டை குஜராத் எடுத்தது.
பின் திலக் வர்மாவும் ஆட்டமிழக்க கடைசியில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா(22*) கடைசி ஓவரில் 3 சிக்ஸர் விளாசி அதிர வைத்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.
எனவே, குஜராத் அணி அடுத்ததாக 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கவுள்ளது. மேலும், குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 2, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.