நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!
இந்த ஆண்டு பெங்களூர் அணி தான் கோப்பையை வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டிவிலியர்ஸ், அணியின் வலிமையையும், ஆர்வத்தையும் பாராட்டி, இந்த முறை கோப்பையை வெல்லும் என முழு நம்பிக்கை வைத்து பேசியுள்ளார்.
ஆர்சிபி அணி பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இறுதிப் போட்டியில் வெற்றி பெறாமல் ஏமாற்றமடைந்துள்ளது. விராட் கோலி *, ஃபாஃப் டு பிளெசிஸ் இதற்கு முன்பு அணிக்காக விளையாடியும் கூட கோப்பையை வெல்லமுடியவில்லை. இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லமுடியாமல் போனது.
இந்த ஆண்டு சேர்த்து 4-வது முறையாக பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று இருக்கிறது. எனவே, இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை கொடுத்து உற்சாகப்படுத்தும் விதமாக ஏபி டிவிலியர்ஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் “என்னை பொறுத்தவரை இந்த ஆண்டு பெங்களூர் அணி தான் வெற்றிபெறும் என நினைக்கிறேன். ஏனென்றால், பெங்களூர் வீரர்கள் அந்த அளவுக்கு சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். சரியான அடித்தளத்தை அமைத்து எந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி விளையாடவேண்டும் என்பதை கற்றுக்கொண்டார்கள்.
எனவே, இறுதிப்போட்டியில் கடினமாக உழைத்து, முக்கியமான தருணங்களில் எதிரணியைவிட சிறப்பாக செயல்பட வேண்டும். நான் மிகவும் உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறேன். கண்டிப்பாக பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால், அதனால் நாம் வெல்வோம் என்று அர்த்தமில்லை. அதனால், ‘ஈ சாலா கப் ’ என்ற வார்த்தைகளை மீண்டும் சொல்லமாட்டேன்.” எனவும் ஏபி டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.