“இங்கிலாந்தை வீழ்த்த எங்க கேப்டன் கில் ரெடியா இருக்காரு” குல்தீப் யாதவ் பேச்சு!
எங்களுடைய கேப்டன் கில் எங்களை வழிநடத்த முழு தயாராக இருக்கிறார் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் எழுந்திருந்தது. எனவே, இப்படியான சூழலில், பிசிசிஐ இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என அறிவித்திருந்தது. கில் சிறப்பாக கேப்டன்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும் திடீரென அவரை கேப்டனாக அறிவித்தவுடன் விமர்சனங்களும் எழுந்தது என்று கூறலாம்.
முன்னாள் வீரர்கள் பலரும் கில்லுக்கு கேப்டன்சி அனுபவம் அந்த அளவுக்கு இல்லை எனவே, எதற்காக அவருக்கு கொடுத்தீர்கள் என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். எனவே, கில் கேப்டன் ஆனதில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளநிலையில், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது ” எங்களுடைய கேப்டன் கில் எங்களை வழிநடத்த முழு தயாராக இருக்கிறார். அவரது அணுகுமுறை மிகவும் அமைதியானது மற்றும் மைதானத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர் ஏற்கனவே உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ஐபிஎல்-லிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய அனுபவம் கொண்டவர். எனவே, அவருக்கு அந்த அனுபவம் இருப்பதால் நிச்சயமாக அவர் சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன்.
குல்தீப் மேலும் கூறுகையில், ” கில்-இன் தலைமையில் அணி ஒரு ஒருங்கிணைந்த அலகாக செயல்படும். இங்கிலாந்தின் ஆக்ரோஷமான ‘பாஸ்பால்’ அணுகுமுறையை எதிர்கொள்ள அவர் எப்படி செயல்படுவார் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். அவரது தலைமைத்துவம் எங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும், மேலும் அவர் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது திறமைகளை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்” எனவும் குல்தீப் யாதவ் தெரிவித்தார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஜூன் 20 முதல் 24 -ஆம் தேதி வரை லீட்ஸ் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.