இன்று 6 மாவட்டங்களில் கனமழை.., ஜூன் 14, 15ல் நீலகிரிக்கு ரெட் அலர்ட்.!
ஜூன் 14, 15-ல் நீலகிரி மாவட்டத்துக்கு 20 செ.மீ. மழைக்கு மேல் பதிவாகக்கூடிய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 14, 15ல் நீலகிரி மாவட்டத்துக்கு 20 செ.மீ. மழைக்கு மேல் பதிவாகக்கூடிய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 14, 15ல் கோவை மலைப்பகுதிகள், நெல்லை மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
பேரிடர் மீட்புக் குழு
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமடைந்துள்ளது.