மணிப்பூர் விவகாரம் : ஆகஸ்ட் 8ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம்.!

கடந்த 20ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றுவரை முடங்கியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியிருந்த எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தான் வெற்றி பெரும் என்றாலும், அந்த தீர்மானம் மீது மத்திய அமைச்சரவை தலைவர் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்பது நடாளுமன்ற விதி. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டாலும் விவாதம் எப்போது நடைபெறும் என அறிவிக்காமல் இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் எனவும், 3 நாள் விவாத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 10ஆம் தேதியில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.