பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
பொள்ளாச்சி வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு. ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் வகையில் கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ முன்வைத்த 76 குற்றச்சாட்டுகளில் கூட்டுச்சதி, பெண்ணை கடத்தி செல்வது, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 66 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் 376 (D) கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
376 (2N) மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தி இருந்தோம் எனவே, எதிரிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.10 லட்சம் – 15 லட்சம் வழை இழப்பீட்டு வழங்கபடும். வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி தான்” எனவும் அவர் தெரிவித்தார்.