முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? இறுதிப்போட்டியில் பெங்களூர் பஞ்சாப் மோதல்!
பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் இதுவரை 36 முறை நேருக்கு நேராக மோதியுள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா 18 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.
எனவே, எந்த அணி இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை மூன்று முறை (2009, 2011, 2016) ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது, ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. முதல் முறையாக 2009- ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அடுத்ததாக 2011-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2016 – ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த முறை நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பெங்களூரு, குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே, பஞ்சாபை பெங்களூர் வீழ்த்தியுள்ளதால் தன் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
அதே சமயம், பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இதுவரை ஒரே ஒரு முறை (2014) ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பஞ்சாப், குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மும்பை குவாலிபயர் மற்றும் இறுதிப்போட்டிகள் என்று வந்துவிட்டாலே டேஞ்சர் அணியாக மாறிவிடும். அப்படி பட்ட மும்பை அணியவே பஞ்சாப் சமாளித்து அவர்களை வெளியே அனுப்பிவிட்டு இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. எனவே, ஏற்கனவே பட்ட தோல்விக்கு பழி தீர்த்து பஞ்சாப் கோப்பை வெல்லுமா?அல்லது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பெங்களூர் கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.