தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!
காந்தாரா-2 படப்பிடிப்பு தளத்தில் படகு விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி தகவல் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’ படப்பிடிப்பு தளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து வதந்திகள் பரவி வருவதால், படக்குழு மிகவும் வேதனையடைந்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில், கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலில், ஒரு பணியாளரின் மரணம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிகழ்ந்ததாகவும், பின்னர் மிமிக்ரி கலைஞர் கலாபவன் நிஜு என்ற பணியாளர் படப்பிடிப்பு தளத்தில் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்வதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்தப் படகில் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி உட்பட 30-க்கும் மேற்பட்ட படக்குழு உறுப்பினர்கள் இருந்தனர். விபத்து மஸ்தி கட்டே பகுதியில் உள்ள மெலினா கொப்பா என்ற இடத்தில், ஆழமற்ற நீர்ப்பகுதியில் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் என்றும் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்தனர், ஆனால் கேமராக்கள் உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன எனவும் தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, ‘காந்தாரா-2’ படக்குழு அறிக்கை வெளியிட்டு, “தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். இவை எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன. படப்பிடிப்பு பாதுகாப்பாக நடைபெறுகிறது, மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று கூறியுள்ளது.
மேலும், படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி மீது விபத்து தொடர்பாக விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து படக்குழு தரப்பில், “விபத்துகள் துரதிர்ஷ்டவசமானவை, ஆனால் இவை அமானுஷ்யத்துடன் தொடர்புடையவை என்று கூறுவது அடிப்படையற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி வருகிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டது.