போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!
போதைப்பொருள் வழக்கில் இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தற்போது கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிந்தடிக்டிக்ஸ் எனப்படும் உயர் ரகபோதைப்பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் இரைப்பை பிரச்சனை உள்ளதாகவும், அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்றும் கிருஷ்ணா வாக்கு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். பின்னர், கிருஷ்ணா தனக்கு வாயுக்கோளாறு, அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படும் என்பதற்கான மருத்துவ சான்றிதழை கொடுத்துள்ளார்
இதை தொடர்ந்து, இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு விசாரணை நடத்துகையில், நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word”-ல் தகவல்கள் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து “Code word”-க்கான அர்த்தம் என்ன…போதைப் பொருள் தொடர்புடையதா? என தீவிர விசாரணைக்கு பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.