உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பொது, வடமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரையில் நிலவிய காற்றுச்சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை ஜூன் 27 மற்றும் நாளை மறுநாள் 28 தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.