ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!
காமெனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியவன் நான் என டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் தலையீடு இதைத் தடுத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹெஸ்போல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை படுகொலை செய்து வெற்றி பெற்றிருந்தாலும், காமெனியை குறிவைத்த முயற்சி தோல்வியடைந்தது. இதற்கு ஈரானின் ரகசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அமெரிக்காவின் வீட்டோ (விலக்கு) முடிவும் காரணமாக இருந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஜூன் 27-ஆம் தேதி அன்று ட்ரூத் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் “காமெனியை படுகொலையிலிருந்து காப்பாற்றியவன் நான். இஸ்ரேல் தாக்குதலின்போது அவர் எங்கு மறைந்திருந்தார் என எனக்குத் தெரியும். ஆனால், அவரை காப்பாற்றினேன். அவர் ‘Thank you, Trump’ என்று சொல்ல வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.
அதே சமயம், ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேலுடனான போரில் வெற்றி பெற்றதாகப் பொய்யாகக் கூறியது ஏன்? அவரது நாடு அழிக்கப்பட்டு, மூன்று அணு ஆயுத தளங்கள் தகர்க்கப்பட்டு, பொருளாதாரம் சீரழிந்து, இராணுவம் பலவீனமாகி, மக்கள் துயரத்தில் உள்ளனர். நான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளைத் தடுத்து, அவரது உயிரைக் காப்பாற்றினேன். ஈரான் மீதான தடைகளை நீக்கி, அவர்களுக்கு உதவ முயன்றேன்.
ஆனால், கமேனி வெறுப்பையும் கோபத்தையும் மட்டுமே வெளிப்படுத்தினார். இதனால், தடை நீக்கும் முயற்சிகளை நிறுத்தினேன். ஈரான் உலக ஒழுங்கில் இணைய வேண்டும், இல்லையெனில் நிலைமை மோசமாகும். கோபத்திற்குப் பதிலாக அமைதியும் நல்லெண்ணமும் மூலம் அவர்கள் முன்னேறலாம். அமைதி வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
ஆனால், ஏற்கனவே வெளியான ஒரு தகவலின் படி காமெனியை பாதுகாக்க, ஈரான் சிறப்பு எலைட் பாதுகாப்பு பிரிவை (IRGC-யின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு தனி அமைப்பு) பயன்படுத்தியது. மேலும், காமெனி செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தாமல், நம்பகமான உதவியாளர் மூலம் தொடர்பு கொண்டு தனது இருப்பிடத்தை மறைத்தார். இதனால், மொசாட்டின் நிழல் ட்ரோன் (shadow drone) தாக்குதல் முயற்சி, ஈரானின் உளவுத்துறையால் பொய்யான இருப்பிட சமிக்ஞைகள் (false geolocation signals) மூலம் திசைதிருப்பப்பட்டு தோல்வியடைந்தது.
இந்த சம்பவம் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான புவிசார் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது. ஈரானிடமிருந்து இதுவரை ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு பதில் வரவில்லை. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும் கூட இன்னும் முழுவதுமாக போர் நிற்கவில்லை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் தொடங்கலாம் என்பது போல தான் இருக்கிறது என்கிற காரணத்தால் அங்கு பதற்றம் முழுவதுமாக குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.