திக் திக்கை ஏற்படுத்தும் காந்தாரா! விபத்தில் உயிர் பிழைத்த நடிகர் ரிஷப் ஷெட்டி!
ஏற்கனவே, காந்தாரா படக்குழுவினர் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் படகு விபத்து ஏற்பட்டு ரிஷப் ஷெட்டி உயிர் தப்பினார்.

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது, கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படகில் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி உட்பட 30-க்கும் மேற்பட்ட படக்குழு உறுப்பினர்கள் இருந்தனர். விபத்து மஸ்தி கட்டே பகுதியில் உள்ள மெலினா கொப்பா என்ற இடத்தில், ஆழமற்ற நீர்ப்பகுதியில் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்தனர், ஆனால் கேமராக்கள் உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தீர்த்தஹள்ளி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உள்ளூர் நாடகக் கலைஞர் ராமதாஸ் பூஜாரி, தக்ஷிண கன்னடாவின் ஆன்மீக பூத-தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு படம் எடுப்பது எப்போதும் ஆபத்தானது என்று கூறினார்.
இருப்பினும், ரிஷப் ஷெட்டி இந்த ஆன்மீக சடங்குகளை மதித்து, விரிவான பூஜைகள் செய்து படத்திற்கு அனுமதி பெற்றதாக உள்ளூர் பூசாரி ஒருவர் தெரிவித்தார். படக்குழுவைச் சேர்ந்த ஒருவர், “படகு கவிழ்ந்தபோது அனைவரும் பதறினோம், ஆனால் ஆழமற்ற நீர் எங்களை காப்பாற்றியது. இது ஆன்மீக ஆசி என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.
இந்த விபத்து, ‘காந்தாரா: சாப்டர் 1’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பல துரதிர்ஷ்டங்களில் ஒன்றாகும். ஏனென்றால், கடந்த மாதத்தில், மூன்று கலைஞர்கள் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர். மே 2025-ல் ஒரு இளநிலைக் கலைஞர் கொல்லூர் சௌபர்ணிகா ஆற்றில் மூழ்கி இறந்தார், மற்றொரு நடிகர் கலாபவன் நிஜு படப்பிடிப்பின்போது மாரடைப்பால் இறந்தார். மேலும், ஒரு மினி பஸ் விபத்து மற்றும் கனமழையால் படப்பிடிப்பு தளம் சேதமடைந்தது போன்ற பிரச்சினைகளும் ஏற்பட்டது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து தற்போது கப்பல் விபத்தும் ஏற்பட்ட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ரிஷப் ஷெட்டி இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை. மேலும், இவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் கூட ரிஷப் ஷெட்டியும் படக்குழுவும் படத்தை முடிக்க உறுதியாக உள்ளனர்.