சென்னை : வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களை வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முத்திர பதித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அவரைச் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது தனித்துவமான நடிப்பால் கோலோச்சிய சௌகார் ஜானகி, கடந்த 1959-ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழியின் முதல் 'பான் இந்தியா' திரைப்படமான 'மகிஷாசுர மர்தினி' (Mahishasura Mardini) படத்தில் கன்னடத் திரையுலகின் லெஜெண்ட் நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகின் மூத்த தூணாக விளங்கும் சௌகார் ஜானகி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் தங்களது பிரார்த்தனைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
