#Alert:இன்று உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- வானிலை ஆய்வு மையம்!

A new low is likely to form in the southern Andaman Sea today (30-11-2021), the Indian Meteorological Department said.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று (30-11-2021) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று (30-11-2021) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான பின்னர் 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,குமரிக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும்,மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.