பிரியாணி என்றாலே பெரும்பாலும் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. சிக்கன், மட்டன் அல்லது காய்கறிகளை வைத்து பிரியாணி செய்வது தான் வழக்கமாக நாம் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் வெறும் முருங்கைக்காயை வைத்து மட்டும் பிரியாணி சுவையாக செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? எளிதில் அட்டகாசமான முறையில் முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய்
தயிர்
வெங்காயம்
பச்சைமிளகாய்
பாஸ்மதி அரிசி
பன்னீர்
நெய்
உப்பு
எண்ணெய்
இஞ்சி
பூண்டு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
முந்திரிப் பருப்பு
தனியா தூள்
தக்காளி
செய்முறை
விழுது :முதலில் முந்திரிப் பருப்பு, இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிப்பு :அதன் பின்பு குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதன் பின்பு 15 நிமிடம் ஊற வைத்து எடுத்த பாசுமதி அரிசி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி விடவும்.
சாதம் :லேசாக ஆவி வந்ததும் குக்கரை திறந்து முருங்கைக்காயை இதனுடன் சேர்த்து விடவும். ஏனென்றால் முன்பே முருங்கைக்காயை சேர்த்தால் கரைந்துவிடும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்து எடுத்து குக்கரில் உள்ள பிரியாணி மீது தூவி கிளறிவிடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முருங்கைக்காய் பிரியாணி வீட்டிலேயே தயார். ஒரு முறை செய்து பாருங்கள்.