"5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது" – COAI ஜெனரல் எஸ்.பி.கோச்சார்...!

5G technology is safe, said SP Kochhar, director-general of the Cellular Operators Association (COAI).

5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது என செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் (COAI) இயக்குனர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த 5ஜி தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது எனவும்,அதற்கு தடை விதிக்கக் கோரியும் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், இது குறித்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஜூகி,

“5ஜி தொழில்நுட்பத்தின் கதிரியக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்துமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தற்போது உள்ள கதிரியக்க அளவை விட 10 முதல் 100 மடங்கு அதிகமான கதிர்வீச்சை இந்த 5ஜி தொழில்நுட்பம் வெளியிடுவதால் மனிதர்களுக்கு மீள முடியாத கடுமையான பாதிப்பையும், சுற்றுச்சூழல் அமைப்பு நிரந்தர சேதத்தை உருவாக்கும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து,இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ததுடன்,5ஜி சேவைக்கு தடை விதிக்கக் கோரிய பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவிற்கு 20 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,இதுகுறித்து,செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் எஸ் பி கோச்சார் கூறுகையில்,

“தொலைத் தொடர்புத் துறையில் மின்காந்த கதிர்வீச்சு வரம்பிற்கான நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவின் தரங்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களை விட மிகவும் கடுமையானவை.

அதன்படி,இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.எனவே ஏற்கனவே எங்கள் அமைப்புகள் இதை கணக்கில் எடுத்துக்கொண்டன.

இந்தியாவில்,கதிர்வீச்சு மற்றும் தாக்கம் குறித்த எந்தவொரு கருத்தும் தவறாக உள்ளன.

இவை தவறான அச்சங்கள் மற்றும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் இது எப்போதும் நிகழ்கிறது”, என்று கூறினார்.

மேலும்,நடிகை ஜூகி சாவ்லாவுக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று,”இந்த தீர்ப்பானது தவறான வதந்திகளைத் தடுத்து நிறுத்துகிறது.

இதன்மூலம்,மற்றவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது குறையும்.

அதுமட்டுமல்லாமல்,5G தொழில்நுட்பத்தால்,உடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் முற்றிலும் தவறாக உள்ளது.ஏனெனில்,5G தொழில்நுட்பம் பாதுகாப்பானது.

மேலும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை ஆதரிக்கிறது.

எனவே,செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (சிஓஏஐ), 5 ஜி ஒரு “கேம் சேஞ்சர்” என்பதை நிரூபிக்கும்.மேலும்,பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கான நன்மைகளுக்கு வழிவகுக்கும்” என்றும் வலியுறுத்தினார்.