50 லட்சம் பாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் ! ஒரே நாளில் ரூ.80 கோடி வசூல்

The toll collection through FASTag crossed Rs. 80 crore per day on 24th December 2020 with record 50 Lakh FASTag transactions per day

சுங்கச் சாவடிகளில் பாஸ்ட் டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 கோடியை கடந்துள்ளது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் பாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நெடுஞ்சாலைகளில், பாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தியா முழுவதும் இதுவரை 2.20 கோடி பாஸ்ட் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே  2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், பாஸ்ட் டேக் பயன்படுத்துவது கட்டாயமாகிறது.

இதற்காக  சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது.பாஸ்ட் டேக் முறையைப் பயன்படுத்துவதன் மூலம்  நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு நேரமும், எரிபொருளும் மிச்சமாகிறது.சமீபத்தில் இந்த மின்னணு கட்டணப் பரிமாற்றத்துக்காக, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

பாஸ்ட் டேக்குகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சவடி மையங்கள் மற்றும் நாடு முழுவதும் 30,000 விற்பனை மையங்களில் கிடைக்கிறது.இது தவிர அமேசான், பிளிப் கார்ட், ஸ்னாப் டீல் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும் இவை வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்துக்காக 27 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதை எளிமையாக ரீசார்ஜ் செய்வதற்கும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இது தவிர சுங்கச்சாவடிகள் மற்றும் விற்பனை மையங்களில் ரொக்கப் பணம் கொடுத்தும் பாஸ்ட் டேக்-ஐ ரீசார்ஜ் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.