கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் அதிகளவில் குறைந்து இருந்தாலும் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தற்போது சிறிது சிறிதாக பரவிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு களிலிருந்து சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், வார நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு வார இறுதி நாட்களில் தற்பொழுது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளும், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், குறைந்த அளவு பேருந்து சேவைகள் மற்றும் ரயில், விமான சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.