நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் காந்தி பேச்சு!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் என்று பாட்னாவில் ராகுல் காந்தி சூளுரை.
பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக வியூகத்தை வகுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிரான ஒருமித்த கருத்துகளைக் கொண்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்த அண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும் முன் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பேசிய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம். காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை நடத்தும் வேளையில் பாஜக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. நாட்டில் தற்போது கருத்தியல் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒற்றுமை இந்தியா கருத்துடன் காங்கிரஸ் நிற்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் என்றார்.
மேலும், பாஜக வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி நாட்டையே பிளவு படுத்தி வருகிறது. பாஜக நாடு முழுவதும் மக்களிடையே, வெறுப்பை தூண்டி பிரிவினைவாத அரசியலை செய்கிறது. ஆனால் காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்க உழைத்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாஜக எங்குள்ளது என தெரியாத வகையில் துடைத்தெறியப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.