கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்றைய தினம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிக அதிக மழை பெய்யும் (24 மணி நேரத்தில் 12–20 செ.மீ) என்பதைக் குறிக்கிறது.
மேலும், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய எட்டு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது கனமழை பெய்யும் (24 மணி நேரத்தில் 7–11 செ.மீ) என்பதைக் குறிக்கிறது.
ஜூன் 29 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், நாளை ஜூன் 27 மற்றும் நாளை மறுநாள் 28 ஆம் தேதிகளில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டபடி வானிலை எச்சரிக்கைகளை அடுத்து, இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர்கள் இன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளனர். இருப்பினும், இடுக்கியில் உள்ள குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் வயநாட்டில் உள்ள தொழில்முறை கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.