ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

பாகிஸ்தான் வாகாவில் உள்ள தனது எல்லையை மூடியுள்ளது, இதனால் அதன் சொந்த குடிமக்கள் அட்டாரி-வாகா கடவையில் சிக்கித் தவிக்கின்றனர்.

Attari Wagah

டெல்லி :கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அட்டாரி எல்லையின் வாயிலை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடியுள்ளது. இதன் காரணமாக பல பாகிஸ்தான் குடிமக்களின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புவதற்கு மத்திய அரசு வழங்கிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறினர்.

முன்னதாக மத்திய அரசாங்கம் 30 ஆம் தேதி முதல் எல்லை மூடலை அறிவித்திருந்தது. ஆனால் நேற்றைய தினம், அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என்றும் மறு உத்தரவு வரும் வரையில், தளர்வு அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. திடீரென பாகிஸ்தான் அடுத்த சில மணி நேரங்களில் வாகா எல்லையை மூடிவிட்டு, இந்தியாவில் இருந்து திரும்பும் தனது சொந்த குடிமக்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் மக்கள் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.  வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு அதிகாலை முதல் காத்திருக்கும் பாகிஸ்தானியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த புதன்கிழமை வரை அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 125 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர், இதன் மூலம் கடந்த ஏழு நாட்களில் நாட்டை விட்டு வெளியேறிய மொத்த பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், பாகிஸ்தானிலிருந்து 1465 இந்தியர்களும் வாகா எல்லையைக் கடந்து தங்களது நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஒரு சிலர் இன்னும் எல்லையில் சிக்கித் தவிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.