ஆந்திரா : மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆனந்தசாகர் மண்டலத்தில் காவல்துறையினர் தீவிர வாகனத் சோதனையிலும், வீடு வீடாகச் சென்று வாகன ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தன்னிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் போலீசார் தன் பைக்கை அபராதத்துக்காகப் பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று அஞ்சிய சுரேஷ் என்பவர், தனது மோட்டார் சைக்கிளைப் பக்கத்துத் தெருவில் உள்ள ஒரு ரகசியமான இடத்தில் கொண்டு போய் ஒளித்து வைத்துள்ளார்.
இவற்றையெல்லாம் அங்கிருந்த அவரது மகன் ஆறு வயது சிறுவன் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னர், காவல்துறை அதிகாரிகள் சுரேஷின் வீட்டிற்கு வந்து அவரது பைக் எங்கே என்று விசாரித்தபோது, அச்சிறுவன் எவ்விதப் பயமும் இன்றி அப்பாவித்தனமாக, "சார் என் பின்னாடி வாங்க எங்க அப்பா வண்டி மாட்டிக்கும்னு பயந்து அதை பக்கத்துத் தெருவுல ஒளிச்சு வச்சிருக்காரு" என்று உண்மையை கூறியுள்ளார்.
சிறுவனின் இந்தத் கலகலப்பான பதிலைக் கேட்டு அங்கு நின்ற காவல்துறையினர் வியப்புடன் சிரித்தனர். இதனையடுத்து, சிறுவனே போலீசாரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று, தன் தந்தை பைக்கை ஒளித்து வைத்திருந்த ரகசிய இடத்தைக் காட்டிவிட்டார். சற்றும் எதிர்பாராத இந்தக் சம்பவத்தைக் கண்ட தந்தை சுரேஷ் அதிர்ச்சியுடன் திகைத்து நின்றார். பின்னர், அந்த வாகனத்தின் ஆவணங்களைச் சரிபார்த்த காவல்துறையினர், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (PUC) சரியாக இல்லாத காரணத்தினால் அதற்கான அபராதத்தை விதித்தனர்.
குழந்தையின் இந்தத் துணிச்சலான நேர்மையையும் அப்பாவித்தனமான செயலையும் அங்கு கூடியிருந்த பொதுமக்களும் காவல்துறையினரும் மனதாரப் பாராட்டியதுடன், சிறுவன் போலீசாரை அழைத்துச் செல்லும் அந்த சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
