மகாராஷ்டிரா மாநிலம், நலசோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனாவால், நாள் ஒன்றுக்கு 63,000- மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு, உட்பட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள நலசோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அவர்களின் உறவினர்கள், அங்குள்ள மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.