டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா மக்களவையில் நிறைவேறியது

டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி யூனியன் பிரதேசமானது முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்து வருகிறது.யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதலான அதிகாரங்கள் உண்டு ,இதனால் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் அடிக்கடி நிர்வாக ரீதியான மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு மாற்றாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்பது விதி.
இது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சேவைகள் மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை இன்று மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார்.மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமித்ஷா, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்தது சச்சரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவும், சட்டம் இயற்றவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது.எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக வருவார் என தெரிவித்தார்.
அமித் ஷா பேசிய பின்னர் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.