அலர்ட்...வங்கக்கடலில் புயல் உருவாகும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

The IMD has forecast a depression in the Andaman Sea tomorrow, which will intensify into a storm in the next 24 hours.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது,நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும்,மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது,நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும்,மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 04-ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரப் பிரதேசம்-ஒடிசா கடற்கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக டிவிட்டரில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ளது. இது நாளை டிசம்பர் 02 ஆம் தேதிக்குள் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் புயலாக வலுப்பெறும். அதைத் தொடர்ந்து, இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, டிசம்பர் 04-ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரப் பிரதேசம்-ஒடிசா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது”,என்று தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக,மீனவர்கள் இன்று அந்தமான் கடல் பகுதிகளுக்கும்,நாளைமத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,வருகின்ற 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்,கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல் தொடர்பாக தமிழகத்திற்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node