தடுப்பூசி குறித்து தன்னார்வலர் புகார், ரூ.100 கோடி இழப்பீடு கோர சீரம் நிறுவனம் முடிவு ..!

It is clear that there is a strange motive behind spreading such information. We are seeking compensation of Rs 100 crore, ”says Serum.

உலகெங்கிலும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பல கட்ட  சோதனைகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் “கோவிட்ஷீல்ட்” தடுப்பூசி செலுத்தி கொண்ட 40 வயது நபர், சீரம் நிறுவனம் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தடுப்பூசி செலுத்திய பிறகு தனக்கு நரம்பியல் முறிவு மற்றும் மோசமான உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் புகார் கூறினார்.

தடுப்பூசி குறித்து குற்றம் சாட்டிய நபருக்கு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் சோதனை தடுப்பூசியை பாதுகாப்பற்றது என்றும், அதன் சோதனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தை ரத்து செய்யக் கோரியதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தவும் கோரியுள்ளார்.

தற்போது சீரம் இன்ஸ்டிடியூட்,  தடுப்பூசியின் ஸ்பான்சரான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அந்த நபருக்கு தடுப்பூசி போட்ட உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிக்கு சட்ட நிறுவனம் ஒன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், சீரம் நிறுவனம் இந்த நபரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனம் கூறுகையில், தன்னார்வலர் சொன்ன குற்றச்சாட்டுகள்  தவறானவை. அந்த தன்னார்வலரின் மருத்துவ நிலைக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம். தடுப்பூசி சோதனைக்கும், தன்னார்வலரின் மருத்துவ நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை அந்த தன்னார்வலர் பொய்யாக குற்றம் சாட்டுகிறார். உடல் நல பிரச்சினைகள் தடுப்பூசி சோதனையால் ஏற்படவில்லை என மருத்துவக் குழு தன்னார்வலரிடம் குறிப்பிட்டு விளக்கிய போதிலும், அவர் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க நினைக்கிறார். இதுபோன்று  தகவல்களைப் பரப்புவதற்குப் பின்னால் ஒரு விசித்திரமான நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே, 100 கோடி ரூபாய் இழப்பீடு கோர உள்ளோம்” என்று சீரம் நிறுவனம் கூறுகிறது.

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கூட்டாக சேர்ந்து கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் “கோவிஷீல்டு” என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, “கோவிஷீல்டு”  தடுப்பூசி 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.