யாஸ் புயலால் 1 கோடி மக்கள் பாதிப்பு;3 லட்சம் வீடுகள் சேதம் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்...!

West Bengal Chief Minister Mamata Banerjee has said that 1 crore people have been affected by Yash storm

யாஸ் புயலால் 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில், முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.

அவ்வாறு,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில்,புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,”யாஸ் புயலின் காரணமாக மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து முன்னதாகவே 15,04,506 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும்,அதி தீவிரமாக வீசிய புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த யாஸ் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மிகவும் நிலைக்குலைந்துள்ளது. எனவே,புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை ஹெலிக்காப்டர் மூலம் நேரில் பார்வையிட உள்ளேன்.மேலும்,கள ஆய்வுக்கு பின்னர் புயலால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு குறித்து இறுதி அறிக்கை அளிக்கப்படும்”, எனத் தெரிவித்துள்ளார்.