திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் 2025 ஜூன் 27 அன்று காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்தார். முதல் தகவல் அறிக்கையில் (FIR), “அஜித்குமார் காவலர்களிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்தார்,” எனக் கூறப்பட்டது.

ஆனால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2025 ஜூன் 29 அன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது உடலில் 18 இடங்களில் கடுமையான வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அஜித்குமாரின் மண்டையோடு, கைகள், முதுகு, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன. குறிப்பாக, தொண்டைப் பகுதியில் ஆழமான காயமும், உட்புற ரத்தக் கசிவும் இருந்ததாகவும், இவை உயிரிழப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

வழக்கமாக 1-2 மணி நேரம் நடைபெறும் பிரேத பரிசோதனை, இந்த வழக்கில் 5 மணி நேரத்திற்கு மேல் நடந்தது, இது காயங்களின் தீவிரத்தையும் விசாரணையின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. நீதிபதி வேங்கடபிரசாத், அஜித்தின் உடலில் உள்ள காயங்களை விரிவாகப் பதிவு செய்தார்.

நகை திருட்டு புகார், மதுரையைச் சேர்ந்த சிவகாமி (வயது 73) மற்றும் அவரது மகள் நிகிதாவால் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு வீல்சேர் உதவி செய்த அஜித்குமார், கார் பார்க்கிங் செய்ய உதவியபோது, 9.5 முதல் 10 பவுன் நகை காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இதனால், மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அஜித்தை விசாரணைக்கு அழைத்தனர். அஜித்தின் சகோதரர் நவீன்குமார், “என் அண்ணனை காவலர்கள் கடுமையாகத் தாக்கினர், அவர் நகை திருடவில்லை,” எனக் குற்றம்சாட்டினார்.

அஜித் மயங்கி விழுந்ததாகக் கூறி, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருப்புப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரேத பரிசோதனை அறிக்கையை அடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 196(2)(a) இன் கீழ் FIR எண் 303/2025 பதிவு செய்யப்பட்டது. ஐந்து காவலர்கள்—ராஜா, சங்கரமணிக்கண்டன், ராமச்சந்திரன், பிரபு, ஆனந்த்—கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்