இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த உடனேயே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது அவரை போலீசார் கம்பத்தில் கட்டி பிரம்பால் தாக்கியதாகவும், இதில் 18 காயங்களுடன் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளயது. இன்று காலை கூட காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், நேற்றைய தினம் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில், போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, மற்றும் லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார். மேலும், காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கை பேணி, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.